பிணை முடிந்துவிட்டதால் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த பொலிஸ்!!

519

powerபிணை முடிந்து விட்டதால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சிவகாசி பொலிசார் நேற்று சுற்றி வளைத்துள்ளனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பிரபல நடிகர் என்பதால் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கித்தருவதாக கூறி அதற்கான கமிஷன் தொகை பெற்று அந்த தொகையை படம் எடுக்க முதலீடு செய்துள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கில் அவர் மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்த புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் குவிந்தன. புகாரின் அடிப்படையில் டெல்லி பொலிசார் பவர் ஸ்டாரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற இவர் தற்போது அண்ணாநகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 2001ம் ஆண்டு அவர் மீது சிவகாசி பொலிசில் ஒரு வழக்கு இருந்தது. பவர் ஸ்டாரின் காரில் இருந்த நம்பர் பிளேட்டுக்கும், ஆவண எண்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் அவர் முன்ஜாமீன் பெற்றார். தற்போது அந்த காலக்கெடு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவகாசி எஸ்.ஐ மூர்த்தி தலைமையிலான தனிப்படை பொலிசார் நேற்று சென்னை சென்று பவர் ஸ்டாரை சுற்றி வளைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் பொலிசாரிடம் பேச்சுவார்தை நடத்தி வருகின்றார்.