தமிழகத்தில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பெற்ற முரளி கார்த்திக் தற்போது தனது மனைவி ஸ்வேதாவுடன் டெல்லியில் வசித்துவருகின்றார்.
இவர் நேற்று அதிகாலை மத்திய டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து கிரீன் பார்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
சாணக்கியபுரியில் உள்ள போலந்து நாட்டுத் தூதரகத்தின் அருகே உள்ள இணைப்பு சாலையில் நிதி மார்க் நோக்கி கார்த்திக் தனது காரை ஒட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது டெல்லி விமான நிலையத்திலிருந்து மயூர் விஹார் நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு சைலோ வேனுடன் மோதியதில் கார்த்திக்கும், அவரது மனைவியும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
வேனில் பயணித்த சுதீப் என்பவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.வேன் சாரதிக்கும் மற்றொருவருக்கும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அடிபட்ட சாரதியை காசியாபாத்தில் உள்ள புஷ்பாஞ்சலி கிராஸ்லே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார்த்திக் அவருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
காலை நான்கு மணி வரை அவரிடம் விசாரணை நடத்திய பொலஸார் பின்னர் அவரை வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர்.
விபத்து நடந்ததிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
மருத்துவமனையில் உள்ள வேன் சாரதியின் தகவல் அறிக்கை பெற்ற பின்னரே விபத்து குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கமுடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.