வவுனியாவில் தொடர்ந்து மழை, மக்கள் சிரமம்!!

602

rainவவுனியாவில் கடந்த நான்கு தினங்களாக மதியத்தின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் போது கடும் காற்றுடன் மின்னல் தாக்கமும் இடம்பெறுகிறது.

வவுனியாவில் பரவலாக மழை பெய்து வருகின்ற போதும், மூன்று முறிப்பு, செட்டிகுளம், வெளிவட்டவீதி, காத்தான் கோட்டம் எனப் பல பகுதிகளில் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்துள்ளன.

பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், மின்சாரமும் தடைபட்டுள்ளது. மின்சாரத்தை வழமைக்கு கொண்டுவர மின்சாரசபை ஊழியர்கள் சிரத்தை எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

பலத்த இடியுடன் கூடிய மழையினால் குழுமாட்டுச்சந்தி, கணேசபுரம், காத்தான் கோட்டம், தாஸ்நகர் ஆகிய பகுதிகளில் திடீர் என அதிகமாக மின்சாரம் வந்தமையால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி , றேடியோ போன்ற மின்சார உபகரணங்கள் செயலிழந்து விட்டதாகவும் இதனால் தமக்கு பெரும் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை கடந்த புதன் கிழமை யாழ் வீதியில் உள்ள அரச விவசாய பண்ணையில் மின்னல் தாக்கி 40 வயதுடைய மகேந்திரம் பராசக்தி என்ற குடும்ப பெண் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.