அவுஸ்திரேலிய அணியின் அபார ஆட்டத்தால் மண்ணைக் கவ்விய இந்திய அணி!!

361

AUSஇந்தியாவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

டெல்லி மொகாலி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி இந்திய அணியின் தவான்- ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா 11 ஓட்டங்களுடனும், தவான் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இந்திய அணி சார்பாக சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் டோனி 139 ஓட்டங்களையும், கோலி 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி கடினமான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது .

அவுஸ்திரேலியா சார்பில் அடம் வோக்ஸ் 76 ஓட்டங்களையும், ஜேம்ஸ் புலுங்கர் 64 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் புலுங்கர் தெரிவானார். இதன்படி 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இதற்கு முன்னதாக புனேயில் நடந்த முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவும், 2வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுக்களால் இந்திய அணியும் வெற்றி பெற்றன.