நாட்டில் கன மழைப்பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் : மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

541

வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞையை வௌியிட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடும் எனவும் 100 முதல் 150 மில்லிமீட்டர் அளவில் மழைப்பொழிவு இடம்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் எனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டைச்சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் குறிப்பாக மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் கனமழை, கடுங்காற்று வீசக்கூடும் எனபதுடன், கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பிராந்தியங்களில் வாழும் மக்களும் மீனவர்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது நல்லதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.