மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் திடீர் நிறுத்தம்!!

584

maldivesமாலைதீவில் நேற்று நடைபெற இருந்த ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகள் பொலிசாரின் திடீர் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. எனவே புதிய தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

மாலைதீவில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் 45.45 சதவீதம் வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.

அந்த நாட்டின் தேர்தல் விதிப்படி 50 சதவீதம் வாக்குகளைப் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்க முடியும். எனவே முதலிடம் பிடித்த நஷீத், 2வது இடம்பிடித்த அப்துல்லா யாமீன் இடையே 28ம் திகதி 2வது கட்ட தேர்தல் நடக்க இருந்தது.

ஆனால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்தல் முடிவை எதிர்த்து வேட்பாளர் காசிம் இப்ராகிம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 20ம் திகதிக்குள் புதிதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனை அடுத்து 19ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையகம் முடிவு செய்து பணிகளில் ஈடுபட்டது.

அதன்படி மாலைதீவில் நேற்று வாக்குப்பதிவுகள் நடக்க இருந்தன. ஆனால் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சற்றுமுன் பொலிஸ் திடீரென்று தலையீடு செய்தது. வாக்குப் பதிவுக்கு செல்ல இருந்த அதிகாரிகளை பொலிசார் தடுத்து விட்டனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலை கடைபிடிக்க தவறியதால் தாங்கள் தலையிட நேரிட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஜனாதிபதி தேர்தலில் நேற்று நடைபெற இருந்த வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையகம் வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது பொலிசார் வந்து தேர்தல் அலுவலகத்தை விட்டு வெளியேறும்படியும், தேர்தலை நிறுத்தம்படியும் கூறினார்கள் என்று தெரிவித்தது.

புதிய தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையகம் கூறியது.

தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வாஷீத் நவம்பர் 11ம் திகதி வரையில் நீடிக்க முடியும். இதனால் அதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இல்லாவிட்டால் மீண்டும் அங்கு அரசியல் குளறுபடி ஏற்படும்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு முடக்கப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி நஷீத்தின் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் செய்தித் தொடர்பாளர் அப்துல் கபூர் கூறுகையில்..

மாலைதீவில் ஜனநாயகத்துக்கு எதிராக பொலிஸ், இராணுவம், ஜனாதிபதி முகமது வாஷீத், உயர் நீதிமன்றம் ஆகிய அனைத்து அரசு எந்திரங்களும் செயல்படுகிறது. இதை தடுக்காவிட்டால் மற்றொரு பர்மா உருவாகும் என்றார்.