நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலையினால் நோர்வூட் மற்றும் பொகவந்தலாவ பிரதேசங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன் அப்பகுதிகளைச் சேர்ந்த 134 குடும்பங்களைச் சேர்ந்த 525 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன், மக்களின் குடியிருப்புக்களிலும் நீர் புகுந்துள்ளது. காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் நோர்வூட் நகர கரையோர குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்தமையினால் 74 குடும்பங்களைச் சேர்ந்த 333 பேர் இடம்பெயர்ந்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலும் நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
பொகவந்தலாவ, கேர்கஸ்வோல்ட், கெம்பியன் பகுதிகளிலும் குடியிருப்புக்கள் சேதமுற்றும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளமையினால் 60 குடும்பங்களை சேர்ந்த 242 பேர் இடம்பெயர்ந்து சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியுள்ளனர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக காசல்றீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 8 அடி உயர்வடைந்துள்ளதாகவும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உடமைகளை இழந்து நிர்க்கதிக்குள்ளான நிலையிலுள்ளவர்களுக்கு உலருணவு பொருட்களை வழங்க பொலிஸாரும், அம்பகமுவ பிரதேச செயலகமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








