அக்கரைப்பற்றிலுள்ள உணவகமொன்றில் நேற்றைய தினம் கோழி பிரியாணி சாப்பிடுவதற்காக சென்றவர்களுக்கு உணவில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட கோழி பிரியாணியுடன் பொரித்து நீண்டநாள் வைத்திருந்த கோழி இறைச்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த உணவகத்தில் தொடர்ந்து உயிராபத்தை தோற்றுவிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும், உணவின் தரம் மோசமானதாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த உணவகம் தமிழ் மக்கள் வாழும் ஆலையடிவேம்பு சுகதார வைத்தியதிகாரி (MOH) எல்லைக்கு உட்பட்டது. இதை மேற்பார்வை செய்ய பகுதிக்கு பொறுப்புள்ள கடமையலுவலர் ஏமாற்று மோசடியாளர்களை பரிசோதித்து நீதிமன்றில் நிறுத்தியது இல்லை.
இவர் போன்ற பொதுச்சுகதார பரிசோதகர் கவனயீனமாக இருப்பதால், குறித்த உணவகத்தில் சாப்பிட செல்பவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தலான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பில் உடனடி கவனத்தை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.








