யாழ்.மாவட்டத்திற்கு இன்னுமொரு மேல் நீதிமன்றம் பருத்தித்துறையில் அமைக்கப் பட வேண்டும். பருத்தித்துறையானது யாழ்ப்பாணத்திலிருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்கின்றது. புதிய மேல் நீதிமன்றம் அமைப்பதன் மூலம் கிளிநொச்சி தொடக்கம் வலிகாமம்வரை நீதி நியாயாதிக்க வலயம் அமையலாம் என நினைக்கின்றேன்.
இந்த விடயம் குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடுவேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
நீதியமைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்டடத் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் முனையாகச் செயற்படும் பூமி பருத்தித்துறையாகும். இங்கு படித்தவர்கள் அதிகம் வாழுகின்றனர். வடமராட்சியில் சரஸ்வதியும் தீவகத்தில் செல்வ இலக்சுமியும் சிறந்து விளங்கும் பூமி என்று சட்டமேதை அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் அன்று கூறியிருந்தார்.
இப்புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட போது இதனைத் திறந்துவைக்க ஜனாதிபதி, அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோர் வருகைதர இருப்ப தாக அவ்வப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவர்களால் வரமுடியவில்லை. எனினும் இக்கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற நோக்கோடு நீதியமைச்சின் அனுமதியுடன் திறந்துவைக்கப்படுகிறது.
பருத்தித்துறை நீதிமன்றத்துக்குரிய முன்னர் நீதிபதி இல்லம் அமைந்திருந்த காணியை படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து நான் யாழ்.கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாரச்சியுடன் கலந்துரையாடி அக்காணியை விடுவிக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன். இக்காணி விடுவிக்கப்பட்டால் அங்கு புதிதாக இரண்டாவது வலயமாக உருவாக்கப்படும் மேல் நீதிமன்றத்தை அமைக்க முயற்சிக்கலாம் எனவும் நினைக்கின்றேன். இது தொடர்பில் நீதி அமைச்சுடன் கலந்துரையாடுவோம். எதிர்காலத்தில் நீதித்துறைக்கு செய்ய வேண்டியதை செய்வோம்.
அதிகாரத்தில் இருக்கும்போது அதைப் பாவிக்க வேண்டும். அதிகாரத்தை பாவிக்க தெரியாதவர்கள் பதவியில் இருப்பதால் அப்பதவி அவசியமில்லை. நான் சமூக நீதிக்காகப் பாடுபடுகிறேன். எனக்கு சரி என்று பட்டதை செய்வேன். நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதாவது பிரச்சினைகள் இருந்தால் உடனடியாகப் பேச்சுவார்தை மேற்கொண்டு சுமுகமாகப் பிரச்சினைகளை முடிக்க வேண்டும். எனது கடமைகளை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் யாழ்.மாவட்டத்துக்கும் மேற்கொள்வேன் என்றார்.
இங்கு உரையாற்றிய யாழ்.சட்டத்தரணி கள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் பேசுகையில், பருத்தித்துறையை பொறுத்தவரை விசாலமான இடத்தில் கடற்கரை சூழலில் இரு நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. இந்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான வாசஸ்தலம் கடற்கரையுடன் அமைந்திருந்தது. குறிப்பிட்ட வாசஸ்தல காணி படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு டெடுக்க கோரிக்கை முன்வைத்தோம். அது சரிவர வில்லை. இப்போது இன் னமும் காலம் போகவில்லை. எனவே இக்காணியை மீளப்பெற்று நீதிமன்றக் கட்டடம் அமைய வேண்டும். இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில் நீர்கொழும்பு நீதிமன்றக் கட்டடம் சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று மிகச் சிறந்த இடமான இவ்விடத்திலும் நீதிமன்றம் அமைய வேண்டும் என்றார்.
பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் கே.முத்துகுமார் பேசுகையில், புதிய கட்டடத்திற்கான பணிகள் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு நிறைவுற்றது. பருத்தித்துறை நீதிமன்றக் கட்டடமானது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அதாவது 1936 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1940 ஆம் ஆண்டிலேயே நிறைவுற்றது. இக்கட்டடம் பூர்த்தியடைவதற்கு முன்னர் இங்கு கடமையாற்றிய நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், எமது சட்டத்தரணிகள் சங்க முன்னாள் செயலாளர் பொ. குமாரசாமி ஆகியோரின் முயற்சியே காரணமாகும். இக் கட்டடத்தில் தபாலகம், இலங்கை வங்கி ஆகியவற்றின் கிளைகள் நிறுவப்பட இருந்தன. ஆனால் இந்த வசதிகள் இப்போது இல்லை. இது குறித்து நீதி அமைச்சிடம் முறைப்பாடு செய்தோம். எனினும் இரண்டாம் நிலையாகவே எம்மை நீதியமைச்சு பார்க்கிறது.
பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னைய காலங்களில் பணியாற்றிய பல நீதிபதிகள் உயர் நீதிமன்றம் வரை நீதிபதிகளாக பதவி யுயர்வு பெற்றுச் சென்றுள்ளனர். குறிப்பாக சில்வா வைத்தியலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா போன்ற நீதிபதிகளை குறிப்பிடலாம் என்றார்.