கடந்த வாரம் போராட்டத்தில் பங்கேற்காத ரயில் ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்பு!!

432

இன்று காலை முதல் ரயில் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொண்ட வேலை நிறுத்தத்தில் இவர்கள் பங்குபற்றி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 6ம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

இதனால், ரயில் போக்குவரத்துக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டதோடு, இந்த விடயம் குறித்து, போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அது பலனளிக்காது போராட்டம் தொடர்ந்தது.

இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் சரத் அமுணுகம தலைமையில் குழுவொன்றை நியமித்தார்.

குறித்த நால்வர் அடங்கிய குழுவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு செய்தன.

எனினும், குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டினால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி, இன்று காலை முதல், தாம் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, ரயில் போக்குவரத்து அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.