வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின்போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா – கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்துகொணடு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்..
வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசம் மற்றும் பாலமோட்டை பகுதிகள் கடந்தகால யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. அத்துடன், சுகாதாரம் உட்பட ஏனைய அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.
எனவே மக்களுக்கான சுகாதார அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலானது அவசர, இடைக்கால மற்றும் நீண்ட கால நோக்கில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். இதன்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
இதன் போது அப் பகுதி மக்கள் அமைச்சரிடம் தமது பிரதேச சுகாதார நிலைமைகள் தொடர்பில் எடுத்துக்கூறியபோது..
தங்களுடைய பிரதேசத்தில் வைத்தியசாலை வசதிகள் இல்லையெனவும் இதற்காக 25 கி.மீ.க்கு அப்பாலுள்ள ஓமந்தை வைத்தியசாலைக்கே செல்லவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் தமக்கு போக்குவரத்து வசதிகள் குறைவாக காணப்படுவதால் தங்கள் பகுதியில் வைத்தியசாலை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை தமது பிரதேசத்திலுள்ள குஞ்சுக்குளம் பாடசாலை அதிபர் இல்லாத நிலையில் பலகாலமாக இயங்குவதாகவும் உடனடியாக அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது தங்கள் பகுதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடத்தப்பட்ட நடமாடும் வைத்திய சேவையில் தொண்டர்களாக பலவருடங்கள் பணியாற்றிய இளைஞர், யுவதிகள் தற்போது வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் நியமனங்கள் வழங்கப்படும்போது தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பகுதியில் வைத்தியசாலைக்கான தேவையுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.