இலங்கை மக்களின் நேர்மையை கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்கள்!!

430

 
இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்த இரு பெண்கள், தமது பணப் பையை தொலைத்துள்ளனர். எனினும் இதனை கண்டெடுத்தவர் உரிய பெண்களிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நாட்டு மக்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிக்கா என்பவரும் இத்தாலி நாட்டை சேர்ந்த வியானா என்பவரும் கடந்த முதலாம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். சுற்றுலா வழிக்காட்டியுடன் குறித்த இருவரும் 14ஆம் திகதி மாலை தம்புள்ளைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பின்னர் சீகிரியாவுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது தம்புள்ளை நகர மத்தியில் அமைந்துள்ள கடைக்கு சென்ற போது ஸ்பெயின் நாட்டு பெண்ணின் பணப்பை கீழே விழுந்துள்ளது. இந்த பணப்பையை அவதானித்த நபர் ஒருவர், அதனை கடை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். பணப் பையை பரிசோதித்த போது இலங்கை பணம், அமெரிக்க டொலர், அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வங்கி அட்டைகள் போன்றவைகள் காணப்பட்டுள்ளன.

பணப் பையை கொடுக்கும் நோக்கில் அதன் உரிமையாளரை அந்தப் பகுதியினர் தேடியுள்ளனர். இதன்போது இரு வெளிநாட்டு பெண்கள் தங்கள் பையை தேடுவதனை அவதானித்துள்ளனர். அதற்கமைய கிடைத்த பையை அவர்களிடம் ஒப்படைக்க ஆயத்தமாகியுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதனை பொலிஸார் முன்னிலையில் அவர் ஒப்படைத்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு தான் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், இலங்கையர்களின் இந்த செயற்பாட்டினை தான் மதிப்பதாகவும் வெளிநாட்டு பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.