வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று (18.12.2017) மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளில் முதல் கட்டமாக வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு வர்த்தக கைத்தொழில. அமைச்சரின் இணைப்பாளர் முகைதீன் தலைமையிலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் வடமாகாண சபை உறுப்பினர் ம.ஜெயதிலக, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மு.சுப்பிரமணியம், இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திரராஜா ஆகியோராலும் செலுத்தப்பட்டது.
வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றுக்கான கட்டுப்பணத்தை அமைச்சர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான அப்துல் பாரி தலைமையிலான குழுவினரும் செலுத்தியிருந்தனர்.