வீதியில் புத்தகம் விற்றவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

433

 
‘Humans of Bombay’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் எழுச்சியூட்டும் வகையிலான வீடியோ ஒன்று பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராம் சுப்ரமணியன் என்னும் இயக்குனர் இந்த வீடியோவை எடுத்துள்ளார், இதில், தெருவில் புத்தகங்களை விற்று வந்த ஏழைச் சிறுவன், தற்போது அமெரிக்க நடைபெறவிருக்கும் மாணவர் நிகழ்ச்சிக்கு தேர்வானது குறித்தும், மும்பை நகர மக்களின் வாழ்க்கைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இது குறித்து அந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கும் மாணவன் சல்மான் சயித் கூறுகையில்,

‘நான் Haji Ali சிக்னலுக்கு எதிர்முனையில் இருக்கும் நடைபாதையில் பிறந்தேன். எனது தாய், குப்பைகளை சேகரிப்பது மற்றும் அப்புறப்படுத்தும் பணியை செய்து வந்தார்.

அதனைப் பார்த்து வளர்ந்த நான், வேலை செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்று சிறு வயதிலேயே முடிவு செய்தேன். அதன்படி, 2ஆம் வகுப்பு படிக்கும் போதே படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டு, Haji Ali சிக்னலில் புத்தகங்களை விற்க தொடங்கினேன்.

புத்தகங்களை விற்கும் போதே, அதிலிருந்து சில வார்த்தைகளை அறிந்து கொள்வேன். மேலும், எனது வாடிக்கையாளர்களும் படிப்பதற்கும், சரியான முறையில் உச்சரிப்பதற்கும் உதவினர்.

அதன்பிறகு ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் சுயமாக இறங்கினேன். ஒருநாள் Akanksha Survey என்னும் பள்ளியின் கருத்துக் கணிப்பு, எங்கள் வீட்டிற்கு அருகே நடந்தது.

நானும், என் நண்பர்களும் அதனை பார்ப்பதை தவிர்த்தோம். ஆனால், எனது தோழி நான் ஆங்கிலம் பேசுவதால், என்னை Akankshaவில் சேர வலியுறுத்தினாள். அவளின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், நான் 12 வயதில் பள்ளியில் சேர்ந்தேன்.

ஆனால் பள்ளிக்கூடம் எனக்கு அந்நியமாக தோன்றியதால், அங்கிருந்து வெளியேறிவிட்டேன். ஒரு வாரத்தில் மீண்டும் சிக்னலில் புத்தகங்களை விற்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் எனது வாடிக்கையாளர்கள் என்னைப் பார்த்து ‘மறுபடியும் இந்த வேலைக்கு வந்து விட்டாயா? உன் வாழ்நாள் முழுவதையும் இந்த சிக்னலிலேயே கழிக்க போகிறாயா? என்று கேட்டனர். அவர்கள் கேட்டது என் மனதை தாக்கியது, அதனை உணர்ந்த நான், எங்கு சென்றேனும் படித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். என் தோழி Caroline didi பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற எனக்கு உதவினாள்.

ஆனால், முதல் முயற்சியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நான், பின்னர் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு, 11ஆம் வகுப்பில் 91 சதவித மதிப்பெண்ணிலும், 12ஆம் வகுப்பில் 81 சதவித மதிப்பெண்ணிலும் தேர்ச்சி பெற்றேன்.

தற்போது, நான் மும்பையின் KC கலையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். சமூகவியல் பாடத்தில் முதுகலை பட்டம் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

எனது தோழி எனக்கு படிப்பிற்கு உதவியது போலவே, நானும் தற்போது மற்றவர்களுக்கு உதவி வருகின்றேன்’ என தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து கொண்டே தனது படிப்பை தொடர்ந்து வரும் சல்மான், தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடக்க உள்ள ‘Students Exchange Program’ நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.