வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

519

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் (20.12) வவுனியாவில் 300 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் சர்வதே சமூகம் தலையிட்டு தங்கள் பிரச்சனைக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.

தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து கடை வீதி வழியாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கண்டி வீதியில் அமைந்துள்ள பிராதான தபாலகத்திற்கு அருகாமையிலுள்ள கொட்டகையை வந்தடைந்திருந்தனர்.

சுமார் 50 பேர் வரையில் கலந்துகொண்ட இப்போராட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் அரசாங்கத்தினை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேசமே தமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.