வவுனியா வடக்கு பிரதேசத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களே ஆள வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

663

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சம்மந்தமாக திருப்தியற்ற நிலை இருந்த போதிலும் வவுனியா வடக்கு பிரதேசத்தின் எதிர்கால நலன்கருதி செயற்படவேண்டிய ஒரு பாரிய கடமை எம் எல்லோருக்கும் இருக்கின்றது என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை உறுப்பினரால் ஊடகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், வவுனியா வடக்கின் புதிய குடியேற்றத்தின் ஊடாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 4 வட்டாரங்களும் வெடிவைத்தகல்லு கிராமத்தோடு களவாக இணைக்கப்பட்ட 2 பெரும்பான்மை இன கிராமங்களில் உள்ள மக்களின் தொகையும் கருத்தில் கொள்ளும் போது வவுனியா வடக்கு பிரதேசசபை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களிடம் செல்ல கூடிய ஒரு அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது.

அதிலும் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முகவர்கள் இம்முறை வவுனியா வடக்கு பிரதேசத்தை தாங்கள் கைப்பற்றுவோம் என உறுதிபட தெரிவித்து வருகின்ற கருத்துக்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

ஏனைய தமிழ் கட்சிகளும் வவுனியா வடக்கு பிரதேசத்தில் வாக்கை சிதறடிக்கும் நோக்கத்துடனும் இருக்கின்றமையால் தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயற்பட ஒரு தேவை இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே வருகின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்களின் பூர்வீகமான வவுனியா வடக்கு பிரதேசத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களே ஆள வாக்காள பெருமக்களான நீங்கள் அனைவரும் சிந்தித்து செயற்படுமாறு உங்கள் அனைவரையும் அன்பாக வேண்டுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.