யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 4ஆவது சந்தேகநபரான கைதடியைச் சேர்ந்த இவர் 2 மாதங்களாக பொலிஸாரிடமிருந்து தப்பித்து வந்த நிலையில் அண்மையில் கைதாகியுள்ளார்.
நுணாவில் பகுதியில் கடைத் தொகுதிகள் உள்ள இடத்தில் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி பட்டப் பகலில் தலைக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர், அங்குள்ள ஒருவரை துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் நுணாவில் மேற்கைச் சேர்ந்த அரசரத்தினம் அபுதன் என்பவர் படுகாயமடைந்திருந்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி இருந்தது.
இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு சாவகச்சேரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் 4ஆவது சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், 2 மாதங்களுக்குப்பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.