ஆசிரியரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த மாணவன்!!

523

USஅமெரிக்காவில் ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன் தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே வடமேற்கு நிவாடாவில் ஸ்பார்கஸ் என்ற பாடசாலை அமைந்துள்ளது. நேற்று பாடசாலை தினவிழா என்பதால் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மற்ற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டுக்கொண்டிருந்தான்.

இதைக்கண்ட அப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் மைக்கல் லேண்ட் பெர்ரி(45) அம்மாணவனை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அவன் சுட்டதில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் அவர் உயிரிழந்தார்.

மேலும் இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவருக்கு தோளிலும், மற்றொருவருக்கு அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்து. இவர்களுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதற்கிடையே துப்பாகியால் சுட்ட மாணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் தனது பெற்றோரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்தது தெரியவந்தது. அவன் எதற்காக துப்பாக்கியால் சுட்டான் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இச்சம்பவம் காரணமாக நிவாடர் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவது குறிப்படத்தக்கது.