நடிகர் கார்த்தி சிறு வயது அனுபவங்கள் மற்றும் சினிமா அனுபவங்கள் பற்றி ருசிகர பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..
சிறு வயதில் எனக்கும் சூர்யாவுக்கும் ஆகவே ஆகாது. இவன் எல்லாம் எனக்கு அண்ணனா, ஏன்டா எனக்குன்னு இப்படி ஒரு அண்ணன் இருக்கான்னு நினைப்பேன். எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.
நான் குண்டாக இருப்பேன். ஆனாலும் சண்டையில் நான் தோற்று விடுவேன். அண்ணன் அவ்வளவு வேகம். என் சைக்கிளை, பைக்கை எடுத்து ஓட்டினால் எனக்கு பிடிக்காது. ஆனால் அண்ணன் ஒன்றையும் விடுவதில்லை. என் சட்டையை விட்டு வைப்பதும் இல்லை. வேடிக்கை என்னவென்றால் என் சட்டையை அண்ணன் போடலாம். அவன் சட்டை எனக்கு சிறியதாக இருக்கும்.
இருவரும் சேர்வது புரூஸ்லீ, ஜெட்லீ படம் பார்க்க மட்டும்தான். இந்த படங்களை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியுமா, அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் சண்டை வரும். கட்டிப்புரண்டு, திட்டிக்கொண்டு உருளுவோம். நான் அமெரிக்கா சென்று படித்து விட்டு ஊர் திரும்பியபோது அவர் நடிகராக வளர்ந்து இருந்தார்.
பிதாமகன் சூட்டிங்கில் இருந்தார். கும்பகோணம் போய் பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை. இவர் பழைய அண்ணனா என்று ஆச்சரியம். அந்த அளவு மென்மையுள்ளவராக மாறி இருந்தார். நான் பருத்திவீரன் முடித்ததும் எனக்கு கார் வாங்கி கொடுத்தார். நான் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. மறக்க முடியாத படம் ஜாலியான அனுபவமாகவும் இருந்தது என்று கூறினார்.