வானொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : இருவர் படுகாயம்!!

654

 
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை பெயார்வெல் பகுதியில் வானொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பிட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ருவான்வெல்ல பகுதியிலிருந்து, நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த வானே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேர்ந்த போது வானில் சாரதி உட்பட இரு பெண்கள் இருந்துள்ள நிலையில், யுவதிகளே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த இரு பெண்களும் நுவரெலியா, கந்தபளை மற்றும் தெரணியகல பகுதிகளைச் சேர்ந்த 23, 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வான் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.