வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகள் சேவையில்!!

256

 
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்ற சமயத்தில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது .

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து குறித்த இ.போ.ச சாரதியான ஏ.எம்.இர்ஸாட் (வயது 30) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தமது ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்ட அனைத்து இலங்கை போக்குவத்துச் சபை பேருந்துகளும் வவுனியா சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இன்று (05.01.2018) காலை 9 மணி தொடக்கம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சபையினரும் தனியார் போக்குவரத்து பிரிவினரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பேரூந்து நிலையத்தில் உள்ளுர் சேவைகள், வெளியூர் சேவைகள் என இரு கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் உள்ளுர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் சேவைகளும் என பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.