வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட ஒரு வருட நிறைவை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்!!

866

 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று (23.01) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 334 வது நாளாக தொடரும் நிலையில், தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யக்கோரி 23.01.2017 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் நடைபெறும் கொட்டகை முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘தமிழரின் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் உலகமே உருக வைத்த நாள் ஒரு வருடம் நிறைவு, ஸ்ரீலங்காவினால் தமிழர்களுக்கு தீர்வைத்தர முடியாது என்பதை உலகுக்கு உணர்த்திய நாள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதையை தாங்கி நின்றனர்.

இப்போராட்டத்தில் வவுனியா, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 14 பேருடன் செய்திருந்தோம். இருந்த போதும் எமக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் எமது பிள்ளைகளை மீட்க போராட்டம் மேற்கொண்டுள்ளோம். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் என்பதுடன் அமரிக்க ஐரோப்பிய நாடுகள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. எந்த அரசியல்வாதிகளுக்கும் எந்த கட்சிகளுக்கும் நாங்கள் ஆதரவு இல்லை அரசியல்வாதிகளில் எமக்கு நம்பிக்கை இல்லை” எனத் தெரிவித்தனர்.