உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு!!

780

 
இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார்.

இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

இதேபோன்று, துருக்கியைச் சேர்ந்தவர் சுல்தான் கோசென் (36) 8 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். உலகின் மிக உயர்ந்த மனிதரான இவரையும் ஆம்கேவையும் தங்களது நாட்டிற்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது.

எகிப்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி வாரியம் விடுத்த அழைப்பினை ஏற்று இருவரும் அங்கு சென்றனர்.

ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டில் உலகின் உயர்ந்த மனிதரானார் கோசன். உலக வரலாற்றில் 8 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர் இவர் தான். பிட்யூட்டரி சுரப்பியினால் அவர் அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறார்.

இதேபோன்று, அகண்டிரோபிளேசியா என மருத்துவ உலகில் அழைக்கப்படும் குறைபாட்டு நோயினால் குள்ள வடிவத்தினை ஆம்கே பெற்றுள்ளார். அவர் 2 வயது குழந்தையின் சராசரி அளவை விட உயரம் குறைந்தவராகக் காணப்படுகிறார்.

இவர்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.