இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று இந்திய மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சுதர்சன சுதர்சன நாச்சியப்பன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..
இலங்கையில் கண்டிப்பாக பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர். இந்தநிலையில் இந்த மாநாடு அங்கு நடைபெற்றால் அவர்களின் பொருளாதார நிலை உயரும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் பின்னடைந்திருக்கிறது. அதை முன்னுக்குகொண்டுவர வேண்டிய பொருப்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட பார்வையும் வேண்டும். அதே நேரத்திலே உணர்வுகளை, உணர்ச்சிகளை சமப்படுத்த வேண்டிய பொருப்பும் இருக்கிறது. தமிழினம் வாழவேண்டும். தமிழ் வாழவேண்டும்.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் கூறியதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் அவருக்கு இல்லை என்று கூறினார்.





