வவுனியா நகரசபை, பிரதேச சபைகளுக்கு ஒருவரையே தவிசாளராக நியமிக்க வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

506

தமிழ்த் தேசியக்.கூட்டமைப்பு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் ஒவ்வொரு தவிசாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரியுள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக இருந்தாலும் சரி, அடுத்த கட்ட தலைவர்களாக இருந்தாலும் சரி உள்ளூராட்சி மன்றங்களினுடைய தாற்பரியத்தை விளங்கிக் கொள்ளாமலும், மக்களது நலன்களை கருத்தில் கொள்ளாமலும் கட்சிகளின் நலனை முன்னிலைப்படுத்தி ஒவ்வொரு சபைகளிலும் தலா 2 வருடங்களை ஒவ்வொருவருக்கும் கொடுப்பதன் மூலம் அந்த சபையின் நடவடிக்கைகள் மிக பலவீனமாக போகும்.

ஒரு உள்ளூராட்சி சபையில் தலைவராக வருபவர் அந்த சபை தொடர்பில் முழுமையாக அறிய ஒரு வருடம் தேவை. அதன் பின் தான் அவர் சேவை செய்ய வேண்டும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை, கட்சி நலனை கருத்தில் கொள்ளாது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சபைகளுக்கும் ஒவ்வொரு தவிசாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.