வவுனியாவில் 42 பவுண் நகைகளைக் கொள்ளையடித்த நபர் பொலிசாரால் கைது!!

809

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6ஆம் திகதி ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹொரேயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரை மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வானில் கொழும்பு சென்ற யாழ் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய நபர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்ட போது அவரது உடமையிலிருந்து இரண்டு கிராம் ஹொரோயினை மீட்டுள்ளதாகவும் இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சந்தேக நபர் திருட்டுச்சம்பவத்துடனும் பெண்கள் தனிமையிலிருக்கும் வீடுகளில் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் 7 நாட்கள் தடுத்து வைக்கும் அனுமதியை நீதிமன்றத்திடம் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணம், செட்டிகுளம், மன்னார் போன்ற பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் நபரினால் திருடப்பட்டு வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட 42 பவுண் நகைகளை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.