கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாகப் பலி!!

502

திருகோணமலை நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவுப் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சாம்பல்தீவு 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41 வயது) என அறிவிக்கப்படுகிறது.

சாம்பல்தீவு பாடசாலைக்கருகில் இருக்கின்ற வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு வாடகைப் பணத்தை வாங்குவதற்காகச் சென்ற போது வீட்டில் வாடகைக்கு இருந்தவருடன் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து வீட்டு உரிமையாளர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் வீட்டில் வாடகைக்கு இருந்தவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.