வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பது இன நல்லிணக்கத்தை குழப்பும் செயலாகும்!!

683

நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். எனினும் குறிப்பிட்டவொரு மதத்தை முதன்மைபடுத்தும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாதென வடக்கு மாகாணசபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை புதிதாக பதவியேற்ற அரசாங்க அதிபர் முயற்சி செய்வது தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் மாகாணசபை உறுப்பினரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

இந்த நாட்டில் பிரதானமாக மூன்று மதங்கள் காணப்படுகின்றன. அவரவர் தங்களுடைய மதங்களை பின்பற்றுவதற்கு உரித்துடையவர்கள். இதைதான் இலங்கையின் அரசியல் சாசனமும் தெளிவாக சொல்கிறது.

எனினும் 2009 யுத்த்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத இடங்களிலேயே விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை தமிழ் மக்கள் மீதான ஒருவகையான அடக்கு முறையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதனால்தான் இலங்கையில் புத்த மதத்தை சிங்கள பௌத்தமாக தமிழ் மக்கள் பார்க்கவேண்டியுள்ளது.

மாவட்ட செயலகமென்பது அரச திணைக்களமாகும். இதில் சேவைகளை பெற எல்லா மதப்பிரிவினரும்இ எல்லா இனப்பரிவினரும் நாளாந்தம் வந்து செல்கின்றனர்.

எனினும் குறிப்பிட்டவாரு மதம்சார்ந்த வழிபாட்டு தலத்தை அமைப்பதானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கபொறிமுறையை பாதிக்கும். ஐநா சபையிலும் சர்வதேசத்திற்கும் இனநல்லிணக்கம் பற்றி அரசாங்கம் வழங்கும் உறுதிமொழிகளுக்கு எதிரான நிலைப்பாடாகவே இந்த விடயத்தை பார்க்கவேண்டியுள்ளது.

மாவட்ட செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்களுக்கான சேவையை திருப்தியுடன் அங்கு பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் வழங்கினாலேயே போதும். அதுவே இறைவனுக்கு ஆற்றும் பெரும்தொண்டாகும்.

வவுனியா மாவட்டம் மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழும் மாவட்டமாகும். அதிலும் 80 வீதத்திற்கு மேலாக தமிழ்பேசும் இந்துக்கள் வாழும் மாவட்டமாகும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களிடையே ஏனையமதங்களின்மீது வெறுப்புணர்வை தூண்டும் செயற்பாடாக அமையும். இதனை அரசாங்க அதிபர் உடனடியாக கைவிடவேண்டுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.