பிரித்தானியாவில் மருத்துவரை சந்திக்க 10 நிமிடம் தாமதமாக சென்றதாக கூறி சிகிச்சை அளிக்க மறுத்ததால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூபோர்ட், சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனைக்கு சிறுமி Ellie-May Clark-ஐ எடுத்து வரும்போது அவருக்கு ஆஸ்துமா நோய் தீவிரமாக இருந்துள்ளது.
மருத்துவரை சந்திக்க முன்னதாக நேரம் ஒதுக்கியிருந்ததால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நோக்கி விரைந்துள்ளனர்.
ஆனால் 10 நிமிடம் கால தாமதம் ஏற்பட்டதாக கூறி மருத்துவர் Joanne Row (54) சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார்.
மட்டுமின்றி சிறுமியின் மருத்துவ ஆவணங்கள் எதையுமே அவர் பார்வையிடவும் மறுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் தங்கள் நிலையை விளக்கியும், அவர் சந்திக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வேறு வழியின்றி குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், சிறுமி Ellie-May மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.
இதையடுத்து இரவு 10.30 மணியளவில் அவர் சுய நினைவை இழந்துள்ளார், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர்.
இருப்பினும் மருத்துவர்களால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர், நேற்றையதினம் மன்னிப்பு கோரியதுடன், உண்மையில் இதுபோன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு சிறுமிக்கு அறுவைசிகிச்சை என மருத்துவர் Rowe முடிவு செய்திருந்தார். ஆனால் தம்மால் 25 நிமிடங்களில் மருத்துவமனை சென்று சேர முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.