உக்ரைனில் தாயாரின் சடலத்துடன் பெண் ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இச்சம்பவம் வெளியாகியுள்ளது.
அந்த சடலத்தை வெள்ளை உடை அணிவித்து தலை அருகே மத வழிபாட்டுக்கான பொருட்களையும் வைத்திருந்துள்ளனர்.
மட்டுமின்றி சடலம் கண்டெடுக்கப்பட்ட அறையானது குப்பைகள் குவிந்தும் அருவருப்பாகவும் காணப்பட்டுள்ளது.
தற்போது 77 வயதாகும் குறித்த பெண்மணி, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த தமது தாயாரின் உடலை பாதுகாத்து வந்துள்ளார்.
இரண்டு கால்களும் சுவாதீனம் இழந்த அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பொலிசார் வந்து குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்வையிட்டபோது, குறித்த பெண்மணி நடக்க முடியாமல் தவித்து வந்துள்ளது தெரிய வந்தது.
குறித்த பெண் தமது வீட்டின் கதவுகளை எப்போதும் திறந்ததில்லை எனவும், அக்கம்பக்கத்தினர் எவருடனும் பேசியதில்லை எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.








