வவுனியாவைச் சேர்ந்த மாணவன் தற்கொலை : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய தடயம்!!

450

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது.

குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அம்மாணவனால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

“கல்விச் செயற்பாட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.தடவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் 26 வயதான மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்தே அவரது சடலத்தை பொலிஸார் மீட்டிருந்தனர்.

இதேவேளை “தனது சகோதரர் கடந்த காலங்களாக பரீட்சை தொடர்பில் கடும் அழுதத்தில் காணப்பட்டார்” என குறித்த மாணவனின் மூத்த சகோதரர் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.