வவுனியாவில் துர்நாற்றம் வீசும் கொல்களம்!!

784

வவுனியா யாழ். வீதியில் அமைந்துள்ள கொல்களம் எனப்படும் மாடு வெட்டும் இடம் அண்மைக்காலமாக துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா, யாழ். வீதி, சோயா ஒழுங்கைப் பகுதியில் நகரசபைக்கு சொந்தமான இக் கொல்களமானது 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இக் கொல்களம் அமைக்கப்படும் போது இப்பகுதியில் குறைந்தளவிலான மக்கள் வாழ்ந்து வந்தபோதிலும் தற்போது அதிகளவான சனத்தொகை கொண்ட இடமாக இப்பகுதி உள்ளது.

இந்நிலையில், குறித்த கொல்களமானது வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் உள்ள நிலையில் அண்மைக்காலமாக துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு சீரான பராமரிப்பு இன்மை, அதிகளவான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதே காரணம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கொல்களத்தில் இருந்தே கொழும்பு போன்ற பகுதிக்கும் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதனால் இவ்வாறான நிலை காணப்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தாம் இது தொடர்பாக நகரசபையினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்த போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமையினால் இப்பகுதி மக்கள் சுவாசநோய்க்கு உள்ளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.