தேனிலவுக்காக ஊட்டி சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞன் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி!!

471

waterயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் இந்தியாவின் ஊட்டி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார். தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டி சென்றிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்த 29 வயதான ரீகன் என்பவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்துள்ளது.


திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் இவர் சென்றுள்ளார்.
சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர்.

பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போயுள்ளனர்.
தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன. இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.


தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும் சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகன் உதவி கோரி அலறினார். அவரது மனைவி உள்ளிட்டோரும் உதவி கேட்டு கதறினர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது.

ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.