அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில், பாதிரியார்கள் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு பிரார்த்தனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், பென்சில்வேனியா நகரில் உள்ள கிறித்துவ தேவாலயம் ஒன்றில், பாதிரியார் சியான் மூன், துப்பாக்கி இன்றி யாரும் இந்தப் பிரார்த்தனைக்கு வரக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த ஜோடிகள் மற்றும் இதர பாதிரியார்கள் அனைவரும் தலையில் கிரீடமும், கையில் துப்பாக்கியும் ஏந்தியபடி பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
அந்த துப்பாக்கிகள் அனைத்தும் AR-15 ரைஃபிள் வகையை சார்ந்ததாகும். இந்த விடயத்தை அறிந்த பலர், தேவாலயத்தின் வாயிலில் கூடி தங்களது எதிர்ப்புக் கோஷங்களை முழங்கினார்கள்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘இவ்வளவு பேர் ஓரிடத்தில் மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் இருப்பதைப் பார்க்கும்போது, அது சிலருக்கு ஆர்வத்தைத் தூண்டலாம் என்பது கூடவா இவர்கள் யாரும் உணரவில்லை? அன்பே உருவான இறைவனை வழிபடும் தேவாலயத்துக்குள் எதற்கு இந்தத் துப்பாக்கி?’ என தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது குறித்து தேவாலயம் தரப்பில் கூறுகையில், ‘சாத்தானை விரட்டியடிக்கவே இந்தத் துப்பாக்கிப் பிரார்த்தனை. ஒவ்வொருவருக்கும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கினோம்.
இதைக் கொடுத்து, கடையில் இருந்து துப்பாக்கிகளை வாங்கிக் கொண்டனர். பார்ப்பதற்கு பயங்கரமான துப்பாக்கிகளாகத் தெரிந்தாலும், இவை அனைத்தும் குண்டு போடாத துப்பாக்கிகள்.
அதைப் பரிசோதித்த பிறகே தேவாலயத்துக்குள் அனுமதித்தோம். அதனால் எதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளது.







