தினமும் செல்ஃபி எடுக்க மூன்று மணிநேரம் செலவிடும் இளைஞர்!!

519

பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தினமும் மூன்று மணிநேரம் செல்பி புகைப்படங்களை எடுத்து அதில் சிலவற்றை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

22 வயதான ஜூனைத் அஹமது எனும் பிரித்தானிய இளைஞர், மொடலாக இருக்கும் நிலையில் செல்ஃபி கிங் என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். இவரை, 50 ஆயிரம் பேர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

தினமும் விதவிதமாக ஒப்பனை செய்து கொள்ளும் ஜூனைத், மூன்று மணிநேரம் செலவு செய்து தினமும் 200 செல்ஃபி புகைப்படங்களை எடுக்கிறார். அவற்றில் சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் இவர், வாரம் ஒருமுறை Facial செய்து கொள்கிறார்.

மேலும், தனது புருவங்களையும் திருத்திக் கொள்ளும் ஜூனைத்,கடந்தாண்டு மட்டும் பற்கள், புருவங்கள், உதடு, கண்கள், தலை என்று அழகுக்காகப் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இது குறித்து ஜூனைத் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாம் கவனிக்கப்பட வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும்.

ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் போட, முதல் நிமிடத்தில் 100 பேர் விருப்பக்குறி இட்டிருப்பார்கள். ஒரு படம் வெளியிட்டு, குறைந்ததது 500 விருப்பக்குறிகளாவது இருந்தால் தான் அந்தப் படத்தைத் தொடர்ந்து வைத்திருப்பேன்.

அதைவிடக் குறைவாக இருந்தால் படத்தை நீக்கிவிடுவேன். ஓராண்டுக்கு முன்புவரை நான் இவ்வாறு இல்லை. ஆனால், சமூக வலைதளங்களின் மீது ஆர்வம் வந்த பிறகு, என்னை மேம்படுத்திக் கொண்டேன்.

பெரும்பாலானவர்கள் என் முயற்சிகளைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மாற்றத்துக்கும் நிறைய உழைப்பு, நேரம், பணம், வலி எல்லாம் தேவைப்படுகிறது. இதைப் புரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

என்னை விமர்சிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். நான் இயற்கையாக இருந்தபோது பள்ளியிலும், கல்லூரியிலும் என் உருவத்தைக் கிண்டல் செய்தார்கள். உங்களை விமர்சனம் செய்பவர்களிடம் நீங்கள் யார் என்று காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.