சிரியாவில் தாக்குதல்கள் தொடரும் : அல்-அசாத்!!

520

கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக தெரிவித்துள்ளது.

ஐ.நா, வின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிறகும் ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கூட்டாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதால் தாக்குதல் தொடரும் என ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தெரிவித்துள்ளார். மனிதாபிமான போர் நிறுத்தம் என மேற்கத்திய நாடுகள் கூறுவது அபத்தமான பொய் எனவும் அசாத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், அரசப்படைகள் கால்வாசி பகுதியை அடைந்துவிட்டதாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கிழக்கு கூட்டாவில், திங்களன்று உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தங்களிடம் உள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.