கண்டியில் பதற்றம் : உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

485

 
கண்டி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர். அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார்.

தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று தீ மூட்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கு நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.