இலங்கையில் அவசரகால சட்டத்திற்குள் சிக்கிய பேஸ்புக், வட்ஸ்அப் : அதிர்ச்சியில் அதன் பயனர்கள்!!

682

இலங்கையில் தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களை மீள அனுமதிக்க கால அவகாசம் எடுக்கும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டியில் தீவிரமடைந்த இன வன்முறைகளை அடுத்து 72 மணித்தியாலங்களுக்கு சமூக வலைத்தளங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கை அமுல்படுத்தப்பட்டது.

எனினும் 72 மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும், சமூக வலைத்தளங்கள் இன்னும் வழமை போன்று செயற்படவில்லை.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவர் ஒஸ்ரின் பெர்னான்டோ,

சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தன்னால் இப்போது கூற முடியாது என்றும், அது நிலைமைகளைப் பொறுத்த விடயம் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, அவசர காலச்சட்டத்தின் கீழேயே, சமூக வலைத்தளங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தை 14 நாட்கள் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பேஸ்புக், வட்ஸ்அப் தடை செய்யப்பட்டமையினால் அதன் பயனர்கள் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உளவியல் சிகிச்சைகளை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழ்வின்-