வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள இரண்டு கோட்டப் பாடசாலைகள் பெரும்பாலானவற்றில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
இதனால் தமது பிள்ளைகளின் கல்வித் தரம் வீழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் வலயத்தின் கல்வி நிலை விழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கல்வி வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளின் பெறுபேறுகள் குறைந்து செல்வதாகவும் இதற்கு ஆசிரியர்கள் பற்றாக் குறையே காரணம் எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகவும், சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக விஞ்ஞானகுளம் நவரட்ணம் வித்தியாலயத்தில் 24 பிள்ளைகள் கற்கும் நிலையில் அங்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். இதேவேளை சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் 21 பிள்ளைகளுக்கு 4 ஆசிரியர்கள் உள்ளனர் எனவும் தெரி விக்கப்படுகிறது.
அத்துடன் கோவில் குஞ்சுக்குளம் அ.த.க. பாடசாலைக்கு 5 மாதங்களாக அதிபர் இல்லாது இயங்குவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு எழுந்துள்ள குற்றச் சாட்டுக் குறித்து வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கும் போது..
ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது உண்மை. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பொதுவாக நெருக்கடியுள்ளது. உயர்தர கலைப் பிரிவில் தமிழ், புவியியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. எனினும் குறித்த பாடசாலைக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





