கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு!!

298

 
மட்டக்களப்பு – வவுணதீவு, குறிஞ்சாமுனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை கணவன் மற்றும் மனைவி இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறிஞ்சாமுனை முதலாம் குறுக்கிலுள்ள வீடொன்றிலிருந்து 40 வயதான க.வேதநாயகமும் அவரது மனைவி 28 வயதான ந.லோகநாயகி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மனைவி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இறந்த பெண்ணிற்கு மூன்று மாத கைக்குழந்தையொன்று உள்ளதாகவும், ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை இருவருக்கும் இடையில் சண்டை இடம்பெற்றதாகவும் இதன்போது அயலவர்கள் சென்று இருவரையும் சமாதானம் செய்திருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மட்டக்களப்பு குற்ற தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.