வெலிக்கடை சிறையில் அரசியல் கைதியாக இருந்து நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த ச.தேவகனின்(70 வயது) இறுதிக்கிரியைகள் வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா 3 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று (19.03) மாலை இடம்பெற்ற இறுதி நிகழ்வுகளை அருட்தந்தை நடாத்தி வைத்திருந்தார்.
இதனையடுத்து ச.தேவகனின் பூதவுடல் வவுனியா தோணிக்கல் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி 60 வயதில் கைது செய்யப்பட்ட நீர்வேலியை சொந்த இடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தேவகன் 10 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு வழக்குகளுக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில், 2 வருடங்கள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தனது தண்டனைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் சந்தோசமாக காணப்பட்ட ச.தேவகனுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் புதிய வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட அவர் நோய்வாய்ப்பட்டு வெலிக்கடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.
எனினும் நோய் குணமடையாமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









