3 வருடங்களுக்கு முன் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 40 இந்தியர்கள் கடந்த 2015ம் ஆண்டு ஜூனில் ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.
இதில், 39 பேரும் இறந்துவிட்ட நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து உயிர்தப்பிய ஹர்ஜீத் மசீ பஞ்சாபில் தான் எதிர்கொண்ட பரபரப்பான நிமிடங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடன் இருந்த 39 இந்தியர்களுடம் இறந்துவிட்டனர் என நான் கடந்த 3 வருடங்களாக அரசிடம் தெரிவித்து வந்தேன், ஆனால் அதனை அன்று ஏற்றுக்கொள்ளாத அரசு இன்று அவர்களின் மரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஈராக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த எங்களை கடந்த 2015 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடத்தினர், சில நாட்கள் அவர்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த அவர்கள், ஒரு நாள் எங்களை மண்டியிட வைத்து துப்பாக்கியை எடுத்து சுட்டுத்தள்ளினர், எனது கண் எதிரிலேயே அனைவரும் செத்து மடிந்தனர்.
அவர்கள் சுட்டதில் குண்டு ஒன்று எனது தொண்டையை நோக்கி பாய்ந்தது, இதனால் நான் சுயநினைவற்று கிடந்தேன். அதன்பின்னர் சில நாட்கள் கழித்து நான் ஒரு வங்கதேச இஸ்லாமியர் என அவர்களிடம் பொய் சொல்லி அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட இந்தியர்களில் பலர் பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஹோசியார்பூர், கபுர்தலா மற்றும் ஜலந்தர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்.






