தொலைபேசி ஒட்டுக் கேட்பதை நிறுத்துமாறு ஒபாமா உத்தரவு!!

518

obamaஅமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்பதை நிறுத்திவைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பா உளவு நிறுவனங்கள் திரட்டிய தகவல்களை என்எஸ்ஏவுடன் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் வெளியிட்ட தகவலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல் உள்பட 32 நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டு கேட்டதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்தி வருகிறது. இதனால் இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒபாமாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என என்எஸ்ஏ விளக்கம் அளித்தது.

உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்ட விவகாரம் தற்போது அமெரிக்காவிற்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதுகுறித்து வெள்ளை மாளிகையில் உயர் மட்ட அதிகாரிகள் தலைமையிலான பரிசீலனை கூட்டம் நடைபெற்றது. அப்போது என்எஸ்ஏவின் இயக்குனர் கெயித் அலெக்சாண்டர் கூறுகையில்..

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் பொதுமக்களின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவையாகும்.

மாறாக ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் தான் என்எஸ்ஏவுடன் ராணுவ ஒத்துழைப்பு என்ற அடிப் படையில் தகவல்களை பரிமாறிக் கொண்டன என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி டயானே கூறுகையில்..

அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதை நிறுத்தி வைக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
தொலைபெசி ஒட்டு கேட்பதை தடை செய்வது குறித்து விரைவில் ஜனாதிபதி ஒபாமா அறவிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.