வவுனியாவில் பேரூந்துக்காக காத்திருந்த பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

576

வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03.2018) 33 வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நேற்றையதினம் (24.03.2018) மேலதிக வகுப்பிற்காக பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். மதியம் 12 மணியளவில் பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளார்.

பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகேயுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 33வயதுடைய இளைஞர் ஒருவர் அந்த பாடசாலை மாணவியை வர்த்தக நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த மாணவி வர்த்த நிலையத்திற்கு சென்ற சமயத்தில் அந்த இளைஞன் மாணவியுடன் பாலியல் ரீதியான சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடமிருந்து தப்பித்துச் சென்ற மாணவி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தயார் மாணவியை அழைத்துக்கொண்டு ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட ஈச்சங்குளம் பொலிஸார் துரிதமாக செயற்பாட்டு குறித்த 33 வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த இளைஞனை இன்றையதினம் (25.03.2018) வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னினையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் கடந்த சில வாரங்களில் மாத்திரம் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பொலிஸார் கடமைகளை சரிவர மேற்கொண்டாலும் சமூதாயமும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டவேண்டும்.