வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா – யாழ் வீதியில் அழகு சேர்த்த ஆங்கிலேயர் காலத்து வாகை மரங்கள் வீதி அபிவிருத்தியின் காரணமாகவும், போடப்பட்ட காப்பெட் காரணமாகவும் முதிர்வு காரணமாகவும் உயிர்ப்பிழந்து காணப்பட்டது.
இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பல தரப்பினரும் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டிருந்தது.
இந் நிலையில் வீதியோரத்தில் நின்ற காய்ந்த மரத்தின் பாரிய பகுதிக்கு விசமிகள் சிலர் நேற்று தீயிட்டுள்ளனர்.
இதன் காரணமாக மரத்தின் பல பகுதிகளுக்கும் தீ பரவியிருந்த போதிலும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் பௌசர் மூலம் நீர் கொண்டு வந்து தீயை அணைத்துள்ளனர்.
தீ அணைக்கப்பட்டிருக்காவிட்டால் தீயினால் எரிந்த மரம் வீதியில் வீழ்ந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








