ஏறாவூர் இரட்டைப் படுகொலை : பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் மீது கத்திக்குத்து!!

634

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது நேற்று மாலை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த உஸனார் முஹம்மது தில்ஷாத் (வயது 29) என்பவரே கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூரில் வைத்தே கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இதனை மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வந்த தாயான நூர்முஹம்மது உஸைரா மற்றும் அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் 2016 செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்தனர்.

இதனையடுத்து அவர்களில் இருவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திலும், மற்றைய இருவரும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலும், மேலும் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 06ஆம் திகதியும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.