வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியை பொலிசார் விடுவிக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
வவுனியா, கனராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை விடுவிக்குமாறு வவுனியா வடக்கு பிதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும், மாவட்ட அரச அதிபர் அந்தக் காணியை பொலிசாருக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து இணைத்தலைவர் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம் ஆகியோர் குறித்த காணிக்கு பதிலாக கனகராயன்குளம் பொலிசாருக்கு வேறு காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தற்போது விளையாட்டு பயிற்சிக்காக அதை பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்ததுடன், அக் காணியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்ட போது, கனகராயன்குளம் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் இருப்பதால் தாம் முடிவு எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த காணி தொடர்பில் நடவடிக்கை எடுத்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.






