வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை : முதலமைச்சரின் தலையீட்டால் நிறுத்தம்!!

1015

வவுனியா மாவட்ட செயலகத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு பின்புறமாகவும் செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் பௌத்த கட்டடக்கலையை பிரதிபலித்து முப்படையினரின் அனுசரணையில் சர்வமதத்தலம் ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த 17.03.2018 அன்று சர்வமதத்தலத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கான குழிகள் வெட்டப்பட்டிருந்தன . இதனை ஊடங்கங்கள் வெளிக்கொண்டமையினையடுத்து வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடி தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இவ்வாறான வழிபாட்டு தலத்தினை அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்ததுடன் அவ்வாறு அமைக்க வேண்டிய தேவையேற்படின் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடுவோம் என வேண்டுகொள் விடுத்தார். இதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (26.03.2018) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமதத்தலம் தேவையா? என வினாவினை எழுப்பினர். இதன் போது சபையில் இருந்த அனைத்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கேள்வி எழுப்பினர்கள் .

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமதத்தலம் தேவையா என வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினாவிய போது நாங்கள் பலருடன் கலந்துரையாடியே சர்வமதத்தலம் கட்டுவதற்குறிய தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தோம் . அது தேவையில்லை என்றால் அந்த திட்டத்தினை விடுவதாக தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து முதலமைச்சர் இத் திட்டத்தினை கைவிடுமாறு தீர்மானத்தினை தெரிவித்திருந்தார்.