மதுவிற்காக பெற்ற தாயை கொன்ற கொடூர மகன்!!

1106

தமிழகத்தில் மதுக்காக ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி கலாவதி(54), மகன் நீலகண்டன்(25) ஆவர், கலாவதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு கலாவதி தனது வீட்டிற்கு கீழே சாலையில் குடிபோதையில் படுத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், நீலகண்டனிடம் இதுகுறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தனது தாயை வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நீலகண்டன், தான் வாங்கி வைத்திருந்த மதுவை தேடியுள்ளார். ஆனால், மது அவரது தாய் கலாவதி குடித்தது அவருக்கு தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நீலகண்டன், கலாவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனது தாயை அவர் கீழே தள்ளிவிட்டார். இதனால் தலையில் பலத்த அடிபட்டு கலாவதி அங்கேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர், நீலகண்டனை சரமாரியாக தாக்கினர். மேலும், சம்பவத்தை அறிந்த பொலிசார், கலாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நீலகண்டனிடம் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்