வவுனியா பாவற்குளம் படிவம் 01 அரச உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டு : கிராம சேவையாளர் மறுப்பு!!

697

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாவற்குளம் படிவும் 1 கிராமத்தை சேர்ந்த மக்கள் அக்கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி கடந்த (23.03.2018) அன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தனர்.

இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு குறித்த கிராம அலுவலகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்..

கடந்த 22.03.2018 அன்று வெளியான செய்தி அறிக்கைக்கு பாவற்குளம் படிவம் 01 கிராம உத்தியோகத்தராகிய நான் உண்மையான சில தகவல்களை தருவதுடன் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.

பாவற்குளம் படிவம் 01 கிராமத்தில் 82 குடும்பங்கள் பதிவு செய்து வசித்து வருகின்றனர். அங்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் 6 குடும்பங்களுடன் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கி பாவற்குளம் பகுதியிலிருந்து புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களிடம் பெருமளவு நிதி பெற்று கிராம அபிவிருத்தி என்ற போர்வையில் சுகபோக வாழ்க்கை நடாத்துவதை அவதானிக்கக் கூடியதாகஉள்ளது.

கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரை பயன்படுத்துவதை இந்த 6 குடும்பங்கள் தவிர ஏனைய மக்களும் தலைவர் தவிர்ந்த ஏனைய சங்க உறுப்பினர்களும் முழுமையாக நிராகரித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு அறிக்கை செய்யப்பட்டு புதிய கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 6 நபர்களினாலும் அரச காணி அத்து மீறி பிடிக்கப்பட்டும் பனை வளங்கள் அழிக்கப்பட்டும் உள்ளதுடன் இவை என்னால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு சில பொலிஸ் அலுவலர்களும் இவர்களின் செயலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது பற்றி செட்டிகுளம் பகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வர இருக்கிறேன்.

கிராம அபிவிருத்தி சங்கத் தலைவராக இருந்த குறித்த நபர் கிராம அபிவிருத்தி சங்க தலைமைப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டால் எதுவும் செய்ய முடியாத நிலையில் என் மீதும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

நானோ, அபிவிருத்தி உத்தியோகத்தரோ எந்த தவறும் இழைக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எம்மைத் தூண்டிவிடும் செயலாகவே அமைகின்றது.

மேலும் எனது பிரிவில் சுமார் 730 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 06 குடும்பங்கள் சேர்ந்த 9-10 நபர்கள் மட்டும் கையொப்பமிட்டு என்னையும் அபிவிருத்தி அலுவலரையும் இடமாற்றம் செய்யுமாறு கோரியுள்ளனர். இதன் காரணமாக பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த காலப்பகுதியில் படிவம் 01 பகுதியில் செட்டிகுளம் பிரதேச செயலகம் ஊடாக பெருமளவான அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த நபரின் செயல் காரணமாக கிராமம் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. இச் செயலுக்கு கிராம மக்கள் சார்பிலும் கிராமத்திற்கு பொறுப்பான அலுவலர் என்ற வகையிலும் கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவிக்கின்றேன். என தெரிவித்தார்.